top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தடைசெய்ய ஆதரவாக தலைநகரவாசிகள் அமோக வாக்களிப்பு

Updated: May 13, 2023

செப்ரெம்பர் முதல்

சேவை ரத்தாகும்!

பாரிஸ் நகரில் மின்னேற்றப்பட்ட எலெக்றிக் ஸ்கூட்டர்களை (trottinettes

électriques) வாடகை சேவையில் ஈடுபடுத்துவதைத் தடை செய்வதற்கு

ஆதரவாக நகரவாசிகள் அமோகமாக வாக்களித்துள்ளனர். அதனை அடுத்து அவற்றின் வாடகை சேவைகள் எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் தொடக்கம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்

படுகிறது.


சில தனியார் நிறுவனங்களால் வாடகை சேவைக்கு விடப்பட்டுள்ள சுமார் 15 ஆயிரம் ஸ்கூட்டர்களையும்

தொடர்ந்தும் பாவனைக்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக பாரிஸ் நகர நிர்வாகப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில்

ஸ்கூட்டர் வாடகை சேவைகளைத்(Les trottinettes en libre-service) தடை செய்வதற்கு ஆதரவாக 89.03% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

தலைநகரின் சகல நிர்வாகப் பிராந்திய

ங்களிலும்(arrondissement) எதிரான வாக்குகளே அதிகம் பதிவாகியுள்ளன.

நகரின் மைய நிர்வாகப் பகுதியில் (centre de la capital) 91,77%வீதமான வாக்காளர்கள் ஸ்கூட்டர் சேவைகளுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பாரிஸ் நகர சபையால் நடத்தப்பட்ட இந்தக் கருத்தறியும் வாக்கு முடிவுகளை அடுத்து ஸ்கூட்டர்களை

வாடகை சேவையில் ஈடுபடுத்தி வருகின்ற வெளிநாடு நிறுவனங்களது

உரிமங்களை நகர நிர்வாகம் புதுப்பிக்க மாட்டாது. இதனால் கோடை விடுமுறை காலத்துக்குப் பின்னர் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கும்

சமயத்தில் ஸ்கூட்டர்களைத் தலை நகரில் காணமுடியாதிருக்கும்.


சொந்தமாகத் தனிப்பட்ட முறையில்

ஸ்கூட்டர்களை வாங்கி வைத்துப் பயன்படுத்துவோரை வாக்கெடுப்பு முடிவு எந்த விதத்திலும் பாதிக்காது.


மிக இலகுவானதும் சுயமாக இயக்கிச் செல்லக் கூடியதுமான இந்த ஸ்கூட்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தலைநகரில் பிரபலமடைந்திருந்தன. குறுகிய தூரப் பயணங்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகியது. குறிப்பாக

இளவயதினரிடம் அது அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது.


வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல கம்பனிகள் போட்டி போட்டுக் கொண்டு

பல்லாயிரக் கணக்கான ஸ்கூட்டர்களை

நகரில் மிகக் குறைந்த வாடகைக் கட்டணத்துடன்

ஏட்டிக்குப் போட்டியாக சேவைக்கு விட்டிருந்தன.எலெக்றிக் ஸ்கூட்டர்களின் இந்தத் திடீர் பெருக்கம்

பின்னாளில் பாதசாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் பெரும்

இடையூறுகளை ஏற்படுத்தின. உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்கு விபத்துகள் நிகழ்ந்தன. உரிய தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும்

அவை கண்ட கண்ட இடங்களில் தரிக்க

விடப்பட்டுவந்தன.

பொதுப் போக்குவரத்து ஒழுங்குகள் மீறப்படுகின்றன என்று தெரிவித்து

பாரிஸ் நகர சபைக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. அதனால் அவற்றை வாடகைக்கு விடுகின்ற நிறுவனங்கள்

மீது பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகள்

அடிக்கடி விதிக்கப்பட்டுவந்தன.


கலிபோர்னியாவைச் சேர்ந்த லைம்

(Lime), நெதர்லாந்து - பிரான்ஸ் கூட்டு

நிறுவனமான டொட் (Dott), ஜேர்மனியின் ரியர் (Tier) ஆகிய மூன்று

கம்பனிகளுக்கும் சொந்தமான 15 ஆயிரம் ஸ்கூட்டர்கள் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.

அவற்றின் வேகம் நகரின் சகல பகுதிகளிலும் மணிக்கு 20 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான சில இடங்களில் வேகம் 10 கிலோ மீற்றர்களாக மட்டுப்

படுத்தப்பட்டிருந்தது. இந்த மூன்று நிறுவனங்களினதும் அனுமதி மார்ச் மாதத்துடன் நிறைவடைந்ததது. இந்தக் கட்டத்திலேயே அவற்றைத் தொடர்ந்து சேவைக்கு அனுமதிப்பதா

என்பதை அறிவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இதேவேளை, இவ்வாறான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைச் செலுத்துவோரின் வயது எல்லையை அரசு 12 இல் இருந்து 14 ஆக உயர்த்தி உள்ளது.

அவை தொடர்பான விதி மீறல்களுக்கான தண்டப்பணமும் குறைந்தது 135 ஈரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

03-04-2023


0 comments

Comments


You can support my work

bottom of page