சூட்டுக்காயத்துடன் கிடந்த
ஆணும் பின்னர் உயிரிழப்பு
புத்தாண்டு இரவு கொடூரம்
நோர்வே நாட்டின் எல்வெறும் (Elverum)
பகுதியில் முப்பது வயதான தமிழ்
யுவதி ஒருவரது சடலம் சூட்டுக் காயத்துடன் கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ஒஸ்லோ செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொலீஸ் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி வெளியிடப்பட்ட தகவல்களின் படி இந்தக் கொலைச் சம்பவம் புத்தாண்டு தினம் நள்ளிரவு தாண்டி
அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலீஸார் அதிகாலை 01.20 மணியளவில் காரில் உடலைக் கண்டுபிடித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
படம் :கொலை நடந்த எல்வெறும் (Elverum) மருத்துவமனைப் பகுதி.
எல்வெறும் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரினுள் பின் ஆசனத்தில் யுவதியின் உடல் கிடந்தது. அருகே சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இளைஞர் ஒருவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளே கிடந்து மீட்கப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இளைஞன் யுவதியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று
சந்தேகிக்கப்படுகிறது. எனினும் மூன்றாவது நபர்கள் எவராவது இதில் சம்பத்தப்பட்டுள்ளனரா என்பதை அறிவதற்காகப் பொலீஸார் சாட்சிகளிடம் தகவல்களைக் கோரியுள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட யுவதி முப்பது வயதான ராகவி வரதராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு பல் மருத்துவர். உயிரிழந்த ஆணின் விவரங்கள் தெரியவில்லை. 32 வயதான அவர் ஒஸ்லோ உல்லெவல் மருத்துவமனையில்(Ullevål Hospital) சேர்க்கப்பட்டுச் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். வழக்கமாக மருத்துவமனைக்குச் சென்று திரும்புகின்ற யுவதி சம்பவ தினமும் - -கொலை செய்யப்படுவதற்கு முன்னராக- இரவு நேரம் அங்கு தங்கியிருந்துள்ளார். பின்னர் அவர்
எப்போது காருக்குத் திரும்பிச் சென்றார் என்பதைக் கண்டறிவதற்காக மருத்துவமனைப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கமெராக்களைப் பொலீஸார் பரிசோதித்து வருகின்றனர்.
அதேசமயம் காரில் இருந்த கைரேகை உட்பட மரபணுத் தடயங்களையும் சேகரித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இருவருக்கும் இடையே எத்தகைய உறவுமுறை இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த ஆண் மிகச் சமீப காலமாகவே யுவதிக்கு அறிமுகமாகியிருந்தவர் என்று குடும்பத்தினருடன் நெருங்கிய வட்டாரங்கள் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன. அதேசமயம் குற்றச் செயல்களுக்காக ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர் என்றும் ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
இளம் மருத்துவரான தமிழ் யுவதியின் படுகொலை நோர்வேத் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
05-01-2023
Comments