top of page
Post: Blog2_Post

கருப்பை புற்றுநோய் விழிப்புக்காகத் தனது மரணச் செய்தியை அறிவித்த இந்திய மொடல் அழகி!

பூனம் பாண்டே மறைவா?

ரசிகர்கள் பெரும் குழப்பம்

சமூக ஊடகங்களில் புயல்


புதிய புற்று நோயாளர்களது எண்ணிக்கை 2050 ஆண்டுக்குள் 77 வீதத்தால் (35 மில்லியன்) அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் இந்திய மொடல் அழகி பூனம் பாண்டே (Poonam Pandey) புற்று நோயால் உயிரிழந்த செய்தி சமூக வலைத் தளங்களில் புயலைக் கிளப்பியது.


அந்தச் செய்தியில் உண்மை எதுவும் இல்லை என்று இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கருப்பை வாய்ப் புற்று நோய் (cervical cancer) மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பூனம் பாண்டேயின் மறைவுச் செய்தி போலியாக இன்ஸ்ரகிராம் தளத்தில் வெளியிடப்பட்டது என்று இப்போது அறிவிக்கப்படுகிறது. அந்தச் செய்தியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


"புற்றுநோயுடன் துணிகரமாகப் போராடி வந்த பூனம் பாண்டே காலமானார்" என்ற செய்தி அவரது இன்ஸ்ரகிராம் தளத்தில் சனிக் கிழமை வெளியாகியது. இந்தியாவின் உள்ளூர் ஊடகங்கள் அவரது மரண அறிவித்தல் செய்தியை வெளியிட்டன. 32 வயதான அவரது மறைவுக்கு இரங்கல் செய்திகள் வெளியாகின. பொலிவூட் சினிமாப் பிரபலங்கள் அஞ்சலிச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர். விக்கிப்பீடியா (Wikipedia) தளத்தில் அவரது சுயவிவரங்களில் இறப்பு நாளும் பதிவுசெய்யப்பட்டது.


எனினும் பூனம் பாண்டேயின் ரசிகர்கள் பலர் செய்தியை நம்ப மறுத்தனர். சில தினங்களுக்கு முன்பு கோவாவில் அவர் நலமே தோன்றுகின்ற வீடியோ வெளியாகி இருந்ததால் மரணச் செய்தியைப் பலரும் நம்பவில்லை. இந்த நிலையில் அந்தச் செய்தி தன்னால் வேண்டும் என்றே வெளியிடப்பட்ட போலிச் செய்தி என்பதை அவரே தனது 1.3 மில்லியன் பயனார்களைக் கொண்டுள்ள இன்ஸ்ரகிராம் தளத்தில் இன்று வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

"ஆமாம். எனது மறைவுச் செய்தியை வெளியிட்டமை மிகக் கொடுமையானது என்பதை நான் அறிவேன். ஆயினும் திடீரென நாங்கள் எல்லோருமே கருப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளோம். அது எங்களுக்கு நல்லதில்லையா?"


-இவ்வாறு பூனம் பாண்டே புதிய வீடியோ செய்தி ஒன்றில் தோன்றித் தெரிவித்திருக்கிறார்." எனது மரணம் பற்றிய அறிவிப்பு எதனைச் சாதித்ததோ அதற்காக நான் பெருமைப் படுகிறேன்" என்றும் அவர் பெருமிதம் வெளியிட்டிருக்கிறார்.


உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி உலகில் கருப்பை வாய்ப் புற்றுநோயால் (cervical cancer) பாதிக்கப்படுவோரில் கால் பங்கினர் இந்தியாவில் உள்ளனர்.


சமூக வலையூடக நட்சத்திரமாகிய

பூனம் பாண்டே 2010 இல் ஓர் இளம் அழகியாக மொடலிங் தொழிலைத் தொடங்கினார். கழிப்பூட்டுகின்ற

தோற்றங்களால் மிக வேகமாகப் பிரபலமானார். 2011 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி

வென்றால் தனது ஆடைகளைக் கழற்றுவேன் என்று அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன்படி இறுதிப் போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் (Wankhede Stadium) தனது ஆடைகளை அகற்றுகின்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பொலிவூட் சினிமா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

03-02-2024

0 comments

Bình luận


You can support my work

bottom of page