top of page
Post: Blog2_Post

ஜோ பைடன் வருகை பாரிஸ் வீதிகளை மூடி தீவிர பாதுகாப்பு!!போக்குவரத்து நெருக்கடி!

சுற்றுவட்டப் பாதையில்

நீண்ட வாகன நெரிசல்


பாரிஸ், ஜூன் 6


அமெரிக்க அதிபர் பைடனின் வருகையை ஒட்டிய விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகப் பாரிஸ் நகரின் பல வீதிகளில் இன்று வியாழக்கிழமை காலை பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டன. பாரிஸ் நகரின் சுற்றுப் பாதையின் (périphérique parisien) கிழக்குப் பகுதி திடீரென மூடப்பட்டதால் வாகன சாரதிகள் குழப்பமடைய நேரிட்டது. உட்புற வீதிகள் பலவற்றிலும் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்படவில்லை.

நோர்மன்டித் தரையிறக்கத்தின் எண்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டிய

சர்வதேச நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அதிபர் பைடனும் துணைவியார் ஜில் பைடனும்

இன்று காலை பாரிஸ் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் வெற்றி விழா நடைபெற்ற நோர்மன்டிப் பகுதிக்கு காலை எட்டு மணியளவில் புறப்பட்டனர். அதேசமயம் உக்ரைன் அதிபர் உட்பட மேலும் பல உலகத் தலைவர்களும் பாரிஸ் வருகை தந்து அங்கிருந்து நோர்மன்டி பயணித்தனர்.

படம் :அமெரிக்க அதிபரை ஓர்லி விமான நிலையத்தில் பிரதமர் கப்ரியேல் அட்டால் வரவேற்றார்.

 

பாரிஸ் பொலீஸ் தலைமையகம் விடுத்த ஓர் அறிக்கையில் அமெரிக்க அரசுத் தலைவரது வருகையுடன் தொடர்புடைய பயணங்களுக்கான பாதுகாப்புக் காரணங்களுக்காகவே வீதிகள் மூடப்பட்டன என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில பகுதிகள் புதன்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை

பாதுகாப்பு வலயங்களாகப் பேணப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நோர்மன்டி கடற்கரையோரம் இன்று பிற்பகல் தொடங்கிய நிகழ்வுகளில் 25 க்கும் மேற்பட்ட அரசுத் தலைவர்கள், பிரதமர்கள், அரச குடும்பத்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் படை வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


உலகத் தலைவர்களது வருகையை ஒட்டியும், நோர்மன்டித் தரையிறக்க நினைவு விழாவை முன்னிட்டும் நாடு முழுவதும் 45 ஆயிரம் பொலீஸார் காவல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

06-06-2024

0 comments

Comments


You can support my work

bottom of page