வாகனப் போக்குவரத்து
இவ்வாரம் ஸ்தம்பிக்கும்
ஜேர்மனியில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பெரும் வீதி மறியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். நாளை ஜனவரி 8 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள
இந்தப் போராட்டங்கள் வாரம் முழுவதும் நீடிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் பிரதான வீதிகள் எங்கும் பல ஆயிரக்கணக்கான உழவு வாகனங்கள் சகிதம் விவசாயிகள் பெரும் பேரணிகளை நடத்தவுள்ளனர்.
ஒலாப் சோல்ஸ் தலைமையிலான ஆளும் சமிக்ஞை விளக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளைக் கண்டித்தே விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடவுள்ளனர். உணவகத் துறையினர் போன்ற பாதிக்கப்பட்ட ஏனைய தொழில்துறையினர்களும் அதில் இணைந்துகொள்ளவுள்ளனர்.
விவசாயிகளுக்கான டீசல் மானியங்கள், விவசாயத் தொழிலுக்கான வாகனங்களுக்குரிய வரிவிலக்குப்போன்ற உதவிகள் அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டதை எதிர்த்தே விவசாயிகள் வீதிக்கு இறங்கிப் போராடவுள்ளனர். வீதி மறியல் உட்பட
பல வழிகளில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்குள் தீவிர வலதுசாரி சக்திகளும் நுழைந்துகொள்ளக் கூடும்
எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வீதிகளை மறிப்பதைத் தடைசெய்யக் கோரும் மனு ஒன்றை விசாரித்த பேர்ளின் நிர்வாக உயர் நீதிமன்றம் (Berlin-Brandenburg Higher Administrative Court), பெரு வீதிகளின் நுழைவு வழிகளை மறித்துப் போராடுவதைச் சட்டரீதியானது எனத் தெரிவித்து அனுமதி வழங்கியுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
07-01-2024
תגובות