மன்னர் பாரம்பரியத்தில்
வழமை மாறான நிகழ்வு
டென்மார்க் நாட்டின் மகாராணி மார்கிரேத்(Queen Margrethe) பதவி துறப்பதாக அறிவித்திருக்கிறார். தனது முடியை அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்வதாக அவர் இன்று நாட்டுக்கு வழங்கிய புதுவருடச் செய்தியில் கூறியிருக்கிறார்.
52 வயதான மகாராணியின் பதவிவிலகலை அடுத்து அவரது மகனும் முடிக்குரிய இளவரசருமாகிய
ஃபிரடெரிக் (Crown Prince Frederick) அரசராகப் பதவியேற்கவுள்ளார். புதிய அரசரின் பதவியேற்பு ஜனவரி 14 ஆம் திகதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராணி மார்கிரேத் அம்மையார்
ஜனவரி 14, 1972 இல் அன்றைய மன்னரும் அவரது தந்தையுமாகிய
ஒன்பதாவது ஃபிரெடெரிக்கின் (King Frederik IX) மறைவை அடுத்து நாட்டின் மகாராணியாகப் பதவியேற்றிருந்தார்.
உயிர்துறக்கும் வரை பதவியில் இருப்பேன் என்று அண்மைக்காலம் வரை கூறிவந்தவர். முடியை மகனிடம் கையளிப்பது என்ற அவரது திடீர் அறிவிப்பு புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் டெனிஷ் மக்களுக்குப் பரபரப்பான செய்தியாக வந்திருக்கிறது.
படம் :மகாராணியும் மகன் இளவரசர் ஃபிரெடெரிக்கும் - - - - -
டென்மார்க் மகாராணியின் முடிவு கடந்த நான்கு தலைமுறைகளாகத் தொடர்ந்து வருகின்ற அரண்மனைப் பாரம்பரியத்துக்கு- ஒருவர் உயிர்துறக்கும் சமயத்திலேயே அடுத்தவர் முடியை ஏற்பது என்ற
வழமைக்கு - மாறான ஒரு தீர்மானம் ஆகும்.
அண்மைக்காலத்தில் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள், சத்திரசிகிச்சை
என்பனவே மகாராணி அரச பதவிப் பொறுப்பை விட்டு விலகக் காரணம் என்று அரண்மனைத் தகவல்கள் கூறுகின்றன.
மகாராணியின் பதவி விலகல் தொடர்பாகப் பிரதமர் மெற்ற ஃபிரெடெரிக்ஸனின் அலுவலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மேன்மை தங்கிய மகாராணியின் சளைக்காத, அர்ப்பணிப்பு மிக்க நீண்ட சேவைக்காக நாட்டு மக்கள்
அனைவரது சார்பிலும் மிகப்பெரும் நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் - என்று பிரதமர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
31-12-2023
Comments