கட்டுமானத்தின் போது
நேர்ந்த கோரச் சம்பவம்
பாரிஸ், மார்ச், 4
துளூஸ் (Toulouse) நகர மெற்றோ ரயில் வழித்தட விஸ்தரிப்புக்காகக் கட்டப்பட்டுவந்த பாலம் ஒன்றின் தளப் பகுதி திடீரென வீழ்ந்ததில் அதில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தார். பலர் காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.
துளூஸ் (Toulouse) நகருக்கு அருகே Labège என்ற பகுதியில் இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வேளை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடைபெற்றவேளை கட்டுமானப் பணியாளர்கள் பலர் அவ்விடத்தில் இருந்துள்ளனர். எனினும் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் யார் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. அம்புலன்ஸ் வாகனங்கள் சகிதம் பெரும் எண்ணிக்கையான தீயணைப்பு வீரர்களும் அவசர மீட்புப் பணியாளர்களும் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் பாலத்தின் சுமார் இருபது மீற்றர் நீளமான தளப் பகுதியே இடிந்து வீழ்ந்துள்ளது. அதற்குள் மேலும் எவராவது சிக்குண்டுள்ளனரா என்பதை அறிய மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
துளூஸ் நகரின் வழித்தடம் பி (line B)
மெற்றோ ரயில் சேவை விஸ்தரிப்புப் பணிகளை Tisséo construction கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அங்கிருந்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
04-03-2024
コメント