top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

தீவிர வலதுசாரிகள் வரலாற்று வெற்றி! 33%வீத வாக்குகள்!! அறுதிப் பலம் நோக்கி பார்டெல்லா அணி!!


🔵இடதுசாரி - பசுமை

முன்னணிக்கு 28.5%


🔴ஆளும் கட்சி அணி 22%


வலது ரிப்பப்ளிக்கன் - 10.50%


🔵ஜனநாயகம் வாய்திறந்து

பேசியுள்ளது- மரின் லூ பென்


பாரிஸ், ஜூன் 30


முற்கொண்டு வெளியான வாக்கு வீதத்தின் படி 577 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஜோர்டான் பார்டெல்லா தலைமையிலான கட்சிக்கு 230 - 280 வரையான ஆசனங்கள் கிடைக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது.


தீவிர இடதுசாரி - சோசலிஸ்ட் - பசுமைக் கட்சிகள் அடங்கிய புதிய வெகுசன முன்னணிக்கு 125-165 ஆசனங்களும் -


மக்ரோனின் ஆளும் கட்சிக்கு 70-100 ஆசனங்கள் வரையும் கிடைக்கும்.


🔵மாலை 5மணி நிலைவரம் :


இன்றைய முதற்சுற்று வாக்களிப்பில் மாலை 17 மணிவரை நாடெங்கும் 59,39% வீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு புதிய சாதனை என்று அறிவிக்கப்படுகிறது.


நாட்டின் பல மாவட்டங்களில் மாலை நேரம் வரையான வாக்குப்பதிவு 60 % வீதத்தைக் கடந்து உயர்ந்து செல்கின்றது என்று பிராந்தியங்களில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.


🔵Finistère - 68.26% (44.38% 2022),


🔵Tarn - 67.31% (45.28% 2022)


🔵Dordogne 66.82% (48.58% 2022),


பாரிஸ் பிராந்தியத்தில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகமாக வசிக்கின்ற Seine-Saint-Denis மாவட்டத்தில் வாக்களிப்பு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் அந்த மாவட்டம் வாக்களிப்பு வீதத்தில் பின்தங்கியுள்ளது. மாலை ஐந்து மணிவரை அங்கு 47,04% வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2022 இல் இது 27,72% வீதமாக இருந்தது.


இன்று மாலை ஆறு மணிக்கும் பெரிய நகரங்களில் ஏழு மணிக்கும் வாக்களிப்பு நிறைவுக்கு வரும்போது ஒட்டுமொத்த வாக்களிப்பு வீதம் 69 % ஆக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. அது நாட்டின் தேர்தல் வரலாற்றில் 1981 இன் பின்னரான

உச்ச அளவாகப் பார்க்கப்படுகிறது.


தேர்தல் முடிவுகளை இரவு எட்டு மணிக்கு முன்பாக வெளியிடுவதையும் கட்சித் தலைவர்கள் அது பற்றிப் பேசுவதையும் தேர்தல் சட்ட விதிகள் தடைசெய்கின்றன. விதி எல் 52-2 இன் படி (article L. 52-2 of the Electoral Code) இதனை மீறுவோர் 75 ஆயிரம் ஈரோக்களை அபராதமாகச் செலுத்த நேரிடும்.


🔵நண்பகல் 12 மணி நிலைவரம் :


பிரான்ஸ் பெருநிலப்பரப்பில் காலை எட்டு மணிக்கு வாக்களிப்புத் தொடங்கியது. நண்பகல் 12 மணிவரை 25.90% வாக்குகள் பதிவாகின என்று அறிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களுடன் ஒப்பிட்டால் இன்றைய இடைத் தேர்தலில் முற்பகல் பதிவான வாக்கு வீதம் அதிகமாகும். பிரான்ஸின் தேர்தல்களில் மதியத்துக்கு முந்திய வாக்குப் பதிவை ஆய்வு செய்பவர்கள் இது 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிக வாக்களிப்பு வீதம் என்று குறிப்பிடுகின்றனர்.


🔵2024-25.90%


🔵2022-18.43%


🔵2017-19.24%


இன்றைய முதற் சுற்றில் பிரான்ஸின் தெற்குப் பிராந்தியமாகிய Bouches-du-Rhône பகுதியிலேயே மிக அதிகளவானோர் (33.70%) காலையில் வாக்களித்திருக்கின்றனர். நண்பகல் வரை மிகக் குறைந்த வாக்களிப்பு வீதம் பாரிஸின் புற நகரங்களை உள்ளடக்கிய Seine-Saint-Denis பகுதியில் (17.93%) பதிவாகியுள்ளது.


வேட்பாளர் ஒருவர் இன்றைய முதற்சுற்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமானால் அவர் தனது தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டும்-


அல்லது அவரது தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளரது எண்ணிக்கையில் 25 சதவீதமானோரது ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும் -


அவ்வாறு எவரும் வெற்றி பெறாத தொகுதிகளில் ஜூலை 7 ஆம் திகதி இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்படும்.


முதற்சுற்றிலே முதல் இரு இடங்களைப் பெறுகின்ற வேட்பாளர்களும் அதே தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 12.5% வீதத்துக்கும் அதிகமானோரது வாக்குகளைப் பெற்றவர்களும் இரண்டாவது சுற்றுக் களத்தில் நிற்க முடியும். ஆகவே ஒரு தொகுதியில் இருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிடவாய்ப்புண்டு.


ஆனால் அதிக வாக்குப் பெற்ற முதல் இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு அவரது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக-ஏனைய போட்டியாளர்களில் எவரும் போட்டியிலிருந்து விலகி அவருக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தலாம்.


பிந்திய செய்திகளுக்கு ThasNews.Com 

இணைய சேவையுடன் இணைந்திருங்கள்..

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

30-06-2024

0 comments

Commentaires


You can support my work

bottom of page