ஒன்று வாங்கினால் 2
இனிக் கிடைக்காது..!
மார்ச்சில் வருகிறது தடை
தடைக்கு முன் மலிவாக
விற்றுத் தீர்க்க மும்முரம்
பல்பொருள் அங்காடிகளில் உணவு அல்லாத சில நுகர்வுப் பொருள்களைக் (non-food products) கவர்ச்சிகரமான விலைக் கழிவில் - -அள்ளுகொள்ளாக - மலிவு விற்பனை (super - promotions) செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது.
பற்பசை, சம்பூ வகைகள், சலவை இயந்திரத் திரவ சவர்க்கார வகைகள், சுத்திகரிப்பு, மற்றும் கிறீம்கள் போன்ற வாசனைப் பொருள்களையே பெரும் விலைக் கழிவில் விற்பது சட்டத்தால் தடைசெய்யப்படவுள்ளது.
மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவிருப்பதால்
அதற்கு முன்பாக இத்தகைய பொருள்களைச் சிறப்புக் கழிவில் விற்பனை செய்வதற்கான இறுதி அவகாசத்தைப் பயன்படுத்தி
அவற்றை விற்றுத் தீர்த்துவிடுவதில் பெரும் அங்காடிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
"டெக்கோசைல்" சட்டம்(Descrozaille law) என அழைக்கப்படுகின்ற புதிய சட்டம் பெரிய கடைத் தொகுதிகளில் சுகாதாரம், சுத்திகரிப்பு, வாசனைத் திரவியம் (hygiene, maintenance, perfumery) சார்ந்த பொருள்களை 34 சதவீதத்துக்கு மேல் விலைக் கழிவில் விற்பதைத் தடை செய்கிறது. Carrefour போன்ற மிகப் பெரிய பல் பொருள் விற்பனை அங்காடிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய பொருள்களை எழுபது எண்பது வீதம் வரையான விலைக் கழிவில் விற்பனை செய்து வருகின்றன. "ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம்
மிகை நுகர்ச்சியைத் தூண்டும் விற்பனை உத்தியைப் பின்பற்றி வருகின்றன.
இவ்வாறான கட்டுப்பாடற்ற கழிவு விலை விற்பனை இந்தப் பொருள்களை உற்பத்திசெய்கின்ற தயாரிப்பாளர்களுடைய அனுமதி இன்றியே வர்த்தகர்களால் தன்னிச்சையாக முன்னெடுக்கப்படுகின்றன. சிறப்புத் தள்ளுபடி விற்பனைகள் நுகர்வோருக்கு வரப்பிரசாதமாகக் காணப்படினும் உற்பத்தியார்களைப் பெரிதும் பாதித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேசமயம் மிகை நுகர்ச்சி, சூழல் பாதிப்பு போன்ற பாதகமான விளைவுகளையும் அது தூண்டிவருகிறது எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
21-02-2024
Comments