பாரிஸ் பிரதேசம் உட்பட
நாட்டின் வடக்கு, மேற்கு
மாவட்டங்களில் தாக்கம்
லூயி எனப் பெயரிடப்பட்ட புயல் (tempête Louis) காரணமாக நாட்டின் வடக்குப் பெரும்பாகத்திலும் மேற்கு மாவட்டங்களிலும் தோன்றியுள்ள சீரற்ற காலநிலை வார இறுதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.
ஆங்கிலக் கால்வாயிலும் வட கடலிலும்
உருவாகிய தாழமுக்கம் காரணமாகவே
தற்போதைய மழை மற்றும் காற்றுடன் கூடிய மழைக் காலநிலை நீடிப்பதாக
வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
கடும் மழை மற்றும் புயல் காற்றுக் காரணமாக பாரிஸ் பிராந்தியம் அடங்கலாக 28 மாவட்டங்களில்
இன்று வியாழக்கிழமை பகல் பொழுது முதல் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப் பட்டிருக்கிறது.
Aisne, Ardennes, Calvados, Eure, Eure-et-Loir, Gers , Haute-Garonne, Hautes-Pyrénées, Manche, Marne, Meuse, Nord, Oise, Orne, Pas-de-Calais, Paris, Pyrénées-Atlantiques, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Somme, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise உட்பட 28 மாவட்டங்களிலும் நகரங்களில் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன.
⚫ஒருவர் உயிரிழப்பு
மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் பல இடங்களில் வீதி மற்றும் ரயில் போக்குவரத்துகள் தடைப்பட்டமை பற்றிய பல செய்திகளைப் பிராந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சில இடங்களில் குடியிருப்புகளுக்கான மின் விநியோகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
Deux-Sèvres என்ற இடத்தில் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த பாலம் ஒன்றைக் கடக்க முற்பட்ட வாகனம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 57 வயதுடைய அதன் சாரதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
புயல்ப் பாதிப்புத் தொடர்பான மேலும் செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
22-02-2024
Comments