கடும் குளிரைச் சந்திக்க
நாடெங்கும் தயார் நிலை
குளிர் காலத்தின் மிக உச்சப் பனிப்
புயல் மற்றும் பனிப் பொழிவை முழு நாடும் எதிர்கொள்ளவிருப்பதை அடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
பல செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ் பிராந்தியத்தில்(région Île-de-France) கடும் குளிர்கால ஏற்பாட்டுத் திட்டம் (le plan "Grand Froid") நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நடைமுறைக்குவந்துள்ளது என்று பிராந்தியப் பொலீஸ் நிர்வாகத் தலைமையகம் அறிவித்துள்ளது.
பாரிஸில் இன்று காலைவேளையில் வெப்பநிலை -2 முதல் -4 பாகை வரை
குறைவடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்குப்பகுதிகளில் அது
இன்று -9°C வரை வீழ்ச்சியுறலாம்.
வீதிகளில், பொது இடங்களில் அநாதரவான நிலையில் தங்கி வாழ்வோர் மற்றும் வசதிகுறைந்த வீடுகளில் வசிப்போர் தங்குவதற்கான பல விசேட நிலையங்கள் தலைநகரில் திறக்கப்பட்டிருக்கின்றன.
வயோதிபர்கள், குழந்தைகள், சுவாசம், மற்றும் இருதய நோயாளிகள், வீடுவாசல் இல்லாதவர்கள் போன்ற தரப்பினரைக் கடுங் குளிர் பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வட ஜரோப்பாவைக் கடந்து வருகின்ற துருவக் குளிர் காற்று நாடெங்கும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெப்ப நிலையில் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே . இந்த
உறைபனிக் காற்று ரஷ்யா மற்றும் ஸ்கன்டிநேவியா பகுதிகளில் இருந்து வருவதால் காலநிலை நிபுணர்கள் அதனை "மொஸ்கோ - பாரிஸ்" (“Moscow-Paris”) என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
இந்த வாரத்தின் நடுப் பகுதியில்
பிரான்ஸின் கிழக்குப் பெரும் பாகத்தில்
வெப்பநிலை இரவு வேளைகளில் -10° முதல் -15° வரை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெள்ளம் பாதித்த வட பகுதி நகரங்களில் இந்த உறைபனிக் குளிர் மக்களுக்கு மேலும் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. பா-து-கலே பிராந்தியத்தில் குடிமனைகள் மத்தியில் தேங்கியுள்ள வெள்ளம்
கடும் குளிரால் உறைந்துபோகும் ஆபத்துக் காணப்படுகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
08-01-2024
Kommentare